"நாம் தமிழ் ஏன் கற்க வேண்டும்?"
உங்கள் எல்லோரையும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எல்லோரும் அன்புடன் எங்கள் மின்வலை பக்கங்களுக்கு அழைக்கின்றோம்.
தாயகத்தில் எமக்கேற்பட்ட இன்னல்கள் காரணமாக இன்று எமது இனம் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றது. அந்நிய சூழலில் வேறுபட்டமொழி கலாச்சாரச் சூழலில் எமது குழந்தைகள் வளர வேண்டியுள்ளது. இந்நிலையைக் கருத்தில்கொண்டு எமது மொழி கலை கலாச்சாரத்தை எம் இளம்தளிர்களுக்கு ஊட்டுவதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு சறே தமிழ் கல்வி கூடம் தொடங்கப்பட்டது, தற்போது 200இற்கும் மேற்பட்ட மாணவர்களுடனும் 20 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் இயங்கி வருகின்றது.
மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழி மற்றும் நுண்கலைப் பொதுத் தேர்வுகளில் ஆர்வத்துடன் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகிறார்கள். அது மட்டுமன்றி பேச்சுப் போட்டி, இல்ல விளையாட்டுப் போட்டி, கலையமுதம், தமிழமுதம் போன்ற நிகழ்வுகளும் ஆண்டுதோறும் நடாத்தப்படுகிறது. மாணவர்கள் சிறு வயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதற்காக நன்னெறி வகுப்புக்களும் நடாத்தப்படுகிறது.
எமது சிறார்களை எமது மொழி கலை கலாச்சாரத்தை பின்பற்ற ஊக்குவிப்பது எமது மொழிக்கும் கலைக்கும் பண்பாட்டுக்கும் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும்.
"நாம் தமிழ் ஏன் கற்க வேண்டும்?"- இந்த கேள்வி புலம்பெர்ந்து வாழும் அனைத்து தமிழ்க் குழந்தைகளின் மனதிலும் - அவர்கள் வெளியிலே சொல்கிறார்களோ இல்லையோ- தோன்றக்கூடிய கேள்விதான். பெற்றோர்கள் என்ற நிலையில் இருந்து இதற்கு நாம் பதில் காண வேண்டியது நம் பொறுப்பு.
எமது குழந்தைகள் ஏன் தமிழ் கற்க வேண்டும்?
எந்த ஒரு வாழும் மொழியின் வளர்ச்சிக்கு: பழையனவற்றின் கலாசாரத்தொடர்ச்சி, அறிவு சாத்திரங்களை உள்வாங்கும் நெகிழ்ச்சி, புதியனவற்றை ஆக்கிடும் முயற்சி ஆகியன அம்சங்கள் முக்கியமாகின்றன. இதில் எதில் ஒரு குறை ஏற்பட்டாலும் அதன் தாக்கங்கள் அம்மொழியின் வளர்ச்சியை பாதிக்கவே செய்யும். உதாரணத்திற்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்க புலவர் கணியன் பூங்குன்றனாரின் பாடலை எடுத்துக்கொள்வோம்.
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
இதன் பொருள்: "எல்லா ஊர்களும் நமது ஊரே, எல்லா மக்களும் நம் மக்களே. நன்மையும் தீமையும் பிறரால் வருவது இல்லை. வலியும் அவ்வலி நீங்கும் செயலும் நமக்கு உள்ளிருந்தே நிகழ்பவையாகும். சாவது புதுமை இல்லை. வாழ்வு மகிழ்ச்சியானது என நாம் கொண்டாடுவதும் இல்லை, கசப்பானது எனக் கொள்வதும் இல்லை. 'இடிமின்னலுடன் கூடிய பெருமழையில் கருத்த மேகங்கள் கூடிய இரவில், மலையிலிருந்து பாறைகளுடன் மோதி வேகமாய் இறங்கும் ஆற்றினில் செல்லும் படகுபோன்றதுதான் நம் வாழ்வும்' என்று சான்றோர் கண்டு தெளிந்ததை நாம் அறிவோம், ஆதலால் புகழடைந்த பெரியோரை நாம் வியப்பதும் இல்லை; சிறியோரை நாம் இகழ்வதும் இல்லை"
இந்தப்பாடல் முழுவதும் தமிழ் பண்பாட்டின் அடிநாதம் அத்தோடு இறவாத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது என்பது இப்பாடல் முழுவதும் படிக்கையில் உணர முடிகிறது. தமிழ்மொழி தொன்று தொட்டுத் தொடரும் ஒரு பெரும் கலாசாரத்தின் நின்று நிலைக்கும் ஒரு மகத்தான கூறு என நிறுவ இப்பாடல் ஒன்றே சிறந்த சான்று.
அடுத்ததாக அறிவு சாத்திரங்களை உள்வாங்கும் நெகிழ்ச்சி என்று பார்த்தால், தமிழ் தனக்குள் இறுகிப்போகாமல் இருக்க, தமிழுடன் கூடி பிறமொழிகளைக் கற்று புலமை பெறுவது அவசியமாகும். தமிழுக்கு பெரும் பங்காற்றிய அனைவரும் பன்மொழி வித்தகர்கள். பன்மொழி அறிவு தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஊறு என்று அவர்கள் ஒருபோதும் கருதியது இல்லை. மொழியில் நெகிழ்வு நிலை இருப்பதும், பிறமொழி அறிவும் ஆரோக்கிய மொழிவளர்ச்சிக்கு அவசியமானவையாகும். இன்று வாழும், வளரும் மொழிகளான - ஆங்கிலம், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி ஆகிய அனைத்திலும் - அந்தந்த நாகரீகங்களின் கலாசாரத் தொடர்ச்சிபோற்றப்படுகிறது. பிற மொழி வார்த்தைகள் தேவைக்கேற்றவாறு வசதியாக உள்வாங்கிக் கொள்கின்றன. இது நாம் தாயகத்தில் இருக்கையில் நம் கண்ணில் படாத பல எம் கலாசார நல்ல அம்சங்கள் புலம்பெயர் வாழ்வில் தெள்ளெனத் தெரிவதில்லையா? அது போலத்தான் பிறமொழி அறிவு, தாய்மொழியின் செம்மையை அறியப் பெரிதும் துணை செய்கிறது. தமிழ்மொழியுடன் பிற மொழிகளையும் கற்பதும், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை உள்வாங்குவதும் தமிழ்மொழிக்கு வலுவேற்றும் செயல்களாகவே அமையும்.
அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கவுள்ள விடயங்களில், அவர்களுக்கு அடையாளம் என்று சொல்லும் வகையில் உள்ள தமிழ் மொழியும், அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள மூத்த எமது தமிழ்க் கலாசாரமும் முக்கியமானவை. வரலாறு, பண்பாடு ஆகியவற்றை வடிகட்டி விட்டுக் கொடுக்கப்படும் தமிழறிவு பாலைவனத்தில் விழுந்த விதையாகப் பயனற்றுப் போகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், தேவாரம், பாசுரங்கள் இது போன்ற பண்பாட்டு வேர்களை விட்டு, வெறும் இலக்கண வார்த்தைக் கோர்வைகளாக மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுமானால், குழந்தைகளுக்கு "ஏன் தமிழ் படிக்க வேண்டும்?" என்ற கேள்வி ஏன் எழாது? மொழியுடன் கூடி நமது கலாசார மதிப்புகள் கற்றுத் தரப்படவில்லையெனில், அதற்குப் பதிலாக ஸ்பானிஷ் அல்லது ஜேர்மன் மொழியை கற்றுக் கொடுத்து விடலாம். எனவே தமிழ் ஏன் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் எப்படிப்பட்ட தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலேயே அடங்கியுள்ளது.
மண்ணைப் பிரிந்து வேற்றிடம் வளரும் எமது அடுத்த தலைமுறைக்கு தங்களது வரலாறு, மரபு மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சி குறித்த பெருமிதமும், விளக்கமும், விழிப்புணர்வும் தேவை, இவற்றைப் பல நூற்றாண்டுகளாகச் சுமந்து நமக்குக் கொண்டு தரும் தமிழ் மொழி மீது அவர்களுக்கு உண்மையான விருப்பு உருவாகும். எனவே அத்தகைய பெருமிதமும், விளக்கமும், விழிப்புணர்வும் தரும் வகையில் தமிழ் மொழி குறித்த அறிவைஅடுத்த தலைமுறைக் தர சறே தமிழ் கல்வி கூட பெற்றோர்கள் முன்வந்திருப்பதையிட்டு எமது நிர்வாக குழு மிக பெருமிதம் அடைகிறது. அவர்களின் முயற்ச்சியை நாமும் பாராட்டுவோமாக!
வணக்கம்
Copyright Surrey Tamil School 2016-2018